சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
சூரரைப் போற்று, ஜெய்பீம் என கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த சூர்யா, இந்த முறை கமர்ஷியல் பக்கம் திரும்பி உள்ளார். சமூக கருத்துக்காக பொள்ளாச்சி சம்பவத்தையும், ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமரா பெண்களை எந்தளவில் சீரழிக்கிறது என்கிற கதையை கொடுத்திருக்கிறார்.
சூர்யா(கண்ணபிரான்) ஊருக்கும், வினய்(இன்பா) ஊருக்கும் இடையே பிரச்சனை இருக்கிறது. அந்த ஊர் பெண்களை இந்த ஊர்காரர்களுக்கும், இந்த ஊர் பெண்களை அந்த ஊர் காரர்களுக்கும் திருமணம் செய்து தர முடியாது என பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நிலையில், வினய் பக்கத்து ஊர் பெண்களை ஆபாசமாக படம் எடுப்பது, இளைஞர்களுடன் காதல் வலையில் விழவைப்பது என படு மோசமான காரியங்களை செய்துக் கொண்டிருக்கும் ஊர் பெரியமனுஷனாக நடித்துள்ளார். டாக்டர் படம் அளவுக்கு இந்த கதாபாத்திரம் வினய்க்கு எடுபடவில்லை.
வழக்கறிஞர் கண்ணபிரானாக சூர்யா நடித்துள்ளார். இளம் வயதிலேயே தனது தங்கையை சிலர் பலாத்காரம் செய்து விட, அவரை காப்பாற்ற போராடியும் முடியாமல் போகிறது. தங்கையின் போட்டோவை சுவற்றில் மாட்டி சூர்யாவின் குடும்பமே சாமியாக கும்பிட்டு வருகிறது. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுக்கும் வினய்யின் வலையில் சூர்யாவே ஒரு கட்டத்தில் சிக்கிக்கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பது கதை. பெண்களுக்கு அட்வைஸ் சொல்லும் படமாக எதற்கும் துணிந்தவன் அமைந்திருக்கிறது.
கலவையான நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார்.
செல்போனில் கேமரா இணைக்கப்பட்டு இருப்பது பெண்களுக்கு சமூகத்தில் எந்தளவுக்கு பாதிப்புகளை கொண்டு வருகிறது என்பதை சொல்லியிருக்கும் படம். மற்றவர்களுக்கு வரும் பிரச்சனையை சூர்யா தடுப்பார் என நினைத்த நிலையில், அவரது அந்தரங்க வீடியோவையே வில்லன் வினய் எடுக்க அதிலிருந்து தன்னையும், தனது மனைவியையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் எதற்கும் துணிந்தவன்.
பெண்கள் வீக்கர் செக்ஸ் அல்ல என்றும், இதுபோன்ற மிரட்டலுக்காக உயிரை விடுவது கோழைத்தனம் என்பதை உணர்த்தி உள்ளது இப்படம்.
படத்தில் சமூகப் போராளியாக வரும் கண்ணபிரான்(சூர்யா) பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்படி எதிர்த்துப் போராடுவார் என்பதுதான் படத்தின் கதை.