ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்‘. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் இப்படத்தை தமிழில் ரிலீஸ் செய்துள்ளது.
1976 நவம்பர் 26-ல் கதை தொடங்குகிறது. பெரும் ஜோதிட ஞானியாக சத்யராஜ் நடித்துள்ளார். ஜோதிடம்(அறிவியல்), வானவியல் சாஸ்திரம் என அனைத்தையும் கணித்து கூறுகிறார். அவருடைய சிஷ்யனாக, பெரிய கை ரேகை நிபுணராக அறிமுகம் ஆகிறார் பிரபாஸ் (விக்ரமாதித்யா).
வெளிநாட்டில் புகழ் பெற்ற கைரேகை நிபுணரான பிரபாஸ், இத்தாலியின் ரோம் நகரில் வசித்து வருகிறார். தன்னுடைய வாழ்நாள் எதுவரை என்று அவரே கணித்து வைத்திருக்கிறார். அதே ரோம் நகரில் டாக்டராக இருப்பவர் பூஜா ஹெக்டே. மருந்தே கண்டு பிடிக்க முடியாத வியாதியால் பாதிப்படைந்துள்ளார். அவருடைய வாழ்நாள் அறுபதே நாட்கள்தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு அழகான சந்திப்பில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே தங்கள் மனதைப் பறி கொடுக்கிறார்கள். தங்களின் எதிர்காலம் பற்றி மருத்துவ ரீதியாக தெரிந்தவரும், ஜோதிட ரீதியாக தெரிந்தவரும் காதலில் விழுகிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
பாகுபலி, சாஹோ என அடுத்தடுத்த படங்களில் பிரபாஸை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்த்தவர்கள், இந்த படத்தில் ரொமான்ஸ் ஹீரோவாக மட்டுமே பார்க்க முடியும். கைரேகை நிபுணராகவும், காதல் நடிப்பிலும் கை தேர்ந்தவராக நடித்திருக்கிறார் பிரபாஸ்.
அற்புதமான வெளிநாட்டு லொகேஷன்கள், கிராபிக்ஸ் காட்சிகள் என ஒரு விஷுவல் பியூட்டியாக படத்தை கொடுப்பதில் இயக்குனர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அதிலும், பிரபாஸ், பூஜா ஹெக்டே(பிரேரனா) முதன் முதலாக சந்திக்கும் அந்த ரயில் காட்சியில் காமிரா சுற்றிச் சுழன்று படமாக்கியது வியப்பூட்டுகிறது. கண்களுக்கு இதமாக, குளிர்ச்சியாக படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் மற்ற கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை. ஆக்ஷன், காமெடி என ஏதுமில்லை. காதல் காட்சிகள் மட்டுமே நிறைந்திருக்கிறது. தமனின் பின்னணி இசை காதலுடன் கைகோர்த்துள்ளது. காட்சிக்கு காட்சி வாழ்க்கை தத்துவம், காதல் ரசம் ததும்பும் கவிதைகள் என அழகு சேர்க்கிறது கார்க்கியின் வசனம். ஜோதிட நம்பிக்கை, காதல், ரிலேஷன்ஷிப், பிரிவு என அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கிறது இப்படம்.
முற்பகுதி – நாயகியின் வாழ்வு பற்றியது.
பிற்பகுதி – பிரபாஸின் வாழ்வு பற்றியது.
காதலும் – காலமும் இணைந்ததா?
விதியா? அல்லது காதலா? என்பது தான் கதை.
ராதே ஷியாம் – காதல் மழை