காதல் தோல்வி, அதனால் ஏற்படும் வலி. உணர்வுப்பூர்வமான மற்றும் வித்தியாசமான கதையை கருவாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் முகமறியான்.
இது குறித்து படத்தின் இயக்குனர் சாய் மோரா கூறியதாவது.
”முகமறியான் திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி.திலீப் குமார் மிகவும் சவாலாக எடுத்து தயாரித்துள்ளார். அவரே வில்லனாகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். கொரோனா காலகட்டங்களில் பல நெருக்கடிகளை சந்தித்து ஆந்திரா வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். மிகவும் பழமையான கட்டிடங்கள் , திகில் நிறைந்த பகுதிகளிலும், பல வருடங்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத இடங்களிலும், படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் படக்குழுவினர் நடிகர்கள் பல விபத்துகளையும், திகிலான பல அனுபவங்களையும் சந்தித்தனர். சுமார் 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிவடைந்துள்ளது. படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த முகமறியான் திரைப்படம் மக்களுக்கு பொதுவாக காதலர்களின் உணர்வுகளை உணர்வுபூர்வமாக உணர்த்தும் கதையாக அமைத்துள்ளேன். காதல் ஏமாற்றங்களை சந்திக்கும் பொழுது அந்த வழிகளை உணரும் இதயங்களில் கண்ணீர் துளிகளை கதைகளமாக்கி இருக்கிறேன். படத்தின் பாடல்கள் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா ரோஷினி ,மாலதி, அனுராதா ஸ்ரீராம், சத்யபிரகாஷ், நமீதா, பாபு ஆகியோருடன் ஸ்ரீகாந்த்தேவாவும் பாடியுள்ளார்.” என்று கூறியுள்ளார்.
இப்படத்தில் கிரண்குமார், திலிப் ஜெயின், ஒய்.ஜி.மகேந்திரன், காயத்திரி அய்யர், சிசர் மனோகர், விஜய் ஆனந்த் , அம்பானி சங்கர் , அஸ்மிதா, சூசேன், கோட்டை பெருமாள், தளபதி தினேஷ் , ரஞ்சன், சாய் கமல் ஆகியோர் நடித்துள்ளனர்.
By: Hari